
கலிங்கத்து போருக்குப் பின் பேரரசன் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். தீய சக்திகள் இந்த 9 புத்தகங்களை கைபற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், தற்போதைய நவீன காலக்கட்டத்தில், மந்திர சக்திகள் மூலம் உலகை ஆட்டிப்படைக்க நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 புத்தகங்களை அடைய முயற்சிக்கிறார்.
நாயகன் தேஜா சஜ்ஜா, ஃபேண்டஸி படங்களின் கதைக்கு கச்சிதமாக பொருந்தி, பார்வையாளர்களை படத்துடன் பயணிக்க வைத்துவிடுகிறார். தான் யார் ?, தன்னிடம் இருக்கும் மிராயின் சக்தி என்ன ? என்று தெரியாமல் இருப்பவர், அது தெரிந்ததும் எடுக்கும் விஸ்வரூபமும் திரையரங்கில் நிச்சயம் கைதட்டல் பெறும்.
வில்லனாக நடித்திருக்கும் மனோஜ் மஞ்சு, 9 புத்தகங்கள் மூலம் சாகாவரம் பெற்று உலகத்தை ஆளும் தனது எண்ணத்தையும், திறமை மிக்கவர்களே கடவுள் என்ற தனது கருத்தையும் அழுத்தமாக பதிவு செய்யும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா நாயக், நாயகனின் இளம் வயது தாயாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரண், முனிவராக நடித்திருக்கும் ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு என அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கெள்ரா ஹரியின் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாண்டத்திற்கு பிரமாண்டம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக சண்டைக்காட்சிகளின் போது இடம்பெறும் பின்னணி இசை வித்தியாசமாக மட்டும் இன்றி, பார்வையாளர்களின் கனவனம் ஈர்க்கும்படியும் உள்ளது.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி கேமரா ஒரு கதாபாத்திரமாகவே திரையில் வலம் வந்து பிரமிக்க வைக்கிறது.
கலை இயக்குநர் ஸ்ரீ நாகேந்திர தங்கலாவின் கைவண்ணம் படம் முழுவதும் பேசுகிறது. பிரமாண்டத்தின் உச்சமாக வடிவமைக்கப்பட்ட செட்டுகளும் கதை சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு.
கதையாசிரியர்கள் கார்த்திக் கட்டம்னேனி மற்றும் மணிபாபு கர்ணம் கடவுள் ராமரையும், அவர் கையில் இருக்கும் வில்லையும் மையமாக கொண்டு ஒரு பிரமாண்டமான ஃபேண்டஸி ஜானரை மிக சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். மனிபாபு கர்ணத்தின் வசனங்களும் சிறப்பு.
படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் கட்டம்னேனி, ஆன்மீகம் பேசும் படம் என்றாலும், அதை அனைத்து தரப்பினரும் கொண்டாடி ரசிக்கும்படி கிராபிக்ஸ் காட்சிகளை கையாண்டிருப்பதோடு, மிராய் என்ற கோளை மையப்படுத்திய கதையில், மந்திர புத்தகம், மந்திர ஊர், மந்திர வித்தைகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை வியக்க கூடிய விதத்தில் காட்சிப்படுத்தி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்
மொத்தத்தில், ‘மிராய்’ வியக்க வைக்கும் படம்…