‘பிபி180’ (BP180) திரைவிமர்சனம்…

சென்னை, காசிமேடு அரசு மருத்துவமனை மருத்துவர் தன்யா ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவ செயலாளர் என்று யாருடைய மிரட்டலுக்கும், உத்தரவுக்கும் அடிபணியாமல் நேர்மையாக ஒரு விசயத்தை செய்கிறார். இதனால், அப்பகுதியில் உள்ள பயங்கரமான ரவுடி டேனியல் பாலாஜி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
கதையின் நாயகியாக மருத்துவர் தங்கம் என்ற கதாபாத்திரத்தில், தைரியமான பெண்ணாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், அளவான நடிப்பு மூலம் அசத்துகிறார். என்ன தான் மிரட்டல்கள் வந்தாலும், தனது மருத்துவ பணியை நேர்மையாக செய்து முடிப்பதில் முனைப்பு காட்டுவதும், எதிரிகளின் மிரட்டல்களை அலட்சியமாக கடந்து போகும் காட்சிகளில் அசால்டாக நடித்து அசத்தியிருக்கிறார். டேனியல் பாலாஜியின் மிரட்டல்களுக்கு நடுவே தன் பணியில் கவனம் செலுத்துபவர், இறுதியாக அவருக்கு விடும் சவால், திரையரங்கையே அதிர வைக்கிறது.
காசிமேடு ரவுடி அர்னால்டு கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் ஓவராக இருப்பது போல் தோன்றினாலும், படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு தன்னிலை மறந்து செயல்படும் விதத்தை தனது நடிப்பில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். யாராலும் வீழ்த்த முடியாத வீரன், பிறர் மனைவி விரும்பும் ஆண், என்ற மமதையில் சுற்றித்திரியும் அவரின் எண்ணத்தை ஒரு பெண் அடித்து நொறுக்கும் போது, தன் கண்களின் மூலமாக கோபத்தை வெளிப்படுத்தி கதாபாத்திரமாக மட்டும் அல்ல, நடிப்பிலும் அரக்கனாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் அழுத்தமான கதாபாத்திரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதிக்கு மேல் அவரது கதாபாத்திரம் பலம் இழந்து விடுகிறது. 
முன்னாள் எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் அருள்தாஸ், காவல்துறை ஆணையராக நடித்திருக்கும் தமிழ், சமூக ஆர்வலராக நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, சகோதரராக நடித்திருக்கும் ரங்கா, தோழியாக நடித்திருக்கும் நயனா ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் இருள் மற்றும் பகல் இரண்டிலும் தனது கேமரா மூலம் மாயாஜாலம் செய்திருக்கிறார்.
பாடல்கள் இல்லை என்றாலும் தனது பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான், இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் மனநிலையை தனது இசை மூலமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
படம் தொடங்கியது முதல் இடைவேளை வரை பெரும் எதிர்பார்ப்புடன் படம் நகரும்படி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் இளையராஜா சேகர், இரண்டாம் பாதி கமர்ஷியல் பாணியில் பயணிக்கும் போது, அங்கேயும் சில திருப்பங்களை வைத்து திரைக்கதையின் பரபரப்பு குறையாமல் படத்தை தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஜெ.பி, அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் மற்றும் ரவுடி இடையிலான மோதல், அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்துக் கொண்டு மேக்கிங் மூலம் பார்வையாளர்களை முதல் பாதி முழுவதும் மிரள வைத்து விடுகிறார். அதே சமயம், சில காட்சிகள் மூலம் லாஜிக் மீறல்களில் திரைக்கதையை சிக்க வைத்து, வழக்கமான கமர்ஷியல் படமாக முடித்திருக்கிறார்.
காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை காட்டி விட்டு, காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் காட்சி வைத்திருக்கும் இயக்குநர் ஜெ.பி, அடுத்த சில நிமிடங்களில் காவல்துறை ஆணையரை மட்டும் இன்றி, ஒட்டுமொத்த காவல்துறைக்கே கலங்கம் ஏற்படும் வகையில் காட்சி வைத்திருப்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகளுக்கு துணை போவது போல் உள்ளது.
ஒரு ரவுடி, என்னதான் திட்டம் போட்டாலும், ஒரு காவல்துறை ஆணையரை இப்படி செய்ய முடியுமா ? என்ற கேள்வி, இப்படம் ரியாலிட்டியில் இருந்து விலயிருப்பதை உணர்த்துகிறது. மற்றபடி மேக்கிங், கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய விதம் ஆகியவை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
ரேட்டிங் 3.5/5