லீடர்’ திரைப்பட விமர்சனம்..

தூத்துக்குடி துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வில்லன் பாகுபலி பிரபாகரன், மூலம் நடக்க இருக்கும் நாசவேலையை தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா முயற்சிக்கிறார். அது முடியாமல் போக, துறைமுகத்திற்குள் அடிக்கடி சென்று வரும் லெஜண்ட் சரவணனை வைத்து அந்த வேலையை செய்ய முடிவு செய்கிறார். அதன்படி, அவரது மகளை வைத்து ஆண்ட்ரியா போடும் திட்டத்தால் லெஜண்ட் சரவணன், பிரபாகரனின் கடத்தல் பொருளை போலீஸிடம் சிக்க வைப்பதோடு, அவரது சாம்ராஜ்யத்தையே அழிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்.
சாதாராண கார் மெக்கானிக்கான லெஜண்ட் சரவணனின் அதிரடி நடவடிக்கையால் சந்தேகம் அடையும் காவல்துறை உயர் அதிகாரியான ஷாம், அவரைப் பற்றி மேற்கொள்ளும் ரகசிய விசாரணையில், திட்டமிட்டு காவல்துறையை பயன்படுத்தி பாகுபலி பிரபாகரனை லெஜண்ட் சரவணன் அழித்திருப்பதை அறிந்துக் கொள்கிறார். இதையடுத்து ஷாம், மேற்கொள்ளும் தொடர் விசாரணையில் லெஜண்ட் சரவணன் பற்றிய பல உண்மைகள் தெரிய வருகிறது. அது என்ன ?, லெஜண்ட் சரவணன் யார்? என்பதை அதிவேக திரைக்கதை மற்றும் அமர்க்களமான ஆக்ஷன் காட்சிகள் மூலம் சொல்வது தான் ‘லீடர்’.

நாயகனாக நடித்திருக்கும் லெஜண்ட் சரவணன், இரண்டாவது படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சாதுவாக அறிமுகமாகி தனது ஒவ்வொரு அதிரடியான செயல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருப்பவர், தோற்றம் மற்றும் உடல் மொழியில் அக்மார்க் ஆக்ஷன் ஹீரோவாக பளிச்சிடுகிறார். மகளின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர், தற்போதைய கோலிவுட் மாஸ் ஹீரோக்களே மிரளும் வகையில், தன் கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராஜ்புத்துக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், திரைக்கதையின் திருப்பத்திற்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆண்ட்ரியா ஜெர்மையா, போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஷாம், வில்லனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருப்பதோடு, அவர்களது திரை இருப்பு படத்திற்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது.
லெஜன் சரவணனை ஆக்ஷன் ஹீரோவாக காட்டுவதோடு, அதை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக காட்சிகளை மிக சிறப்பாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில், இறுதிவரை திருப்பங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக, கிளைமாக்ஸ் நெருக்கத்தில் வைத்த சில காட்சிகள் ஆச்சரியப்பட வைத்தாலும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. இருந்தாலும் அது குறையாக அல்லாமல் திரைக்கதையின் வேகம் மற்றும் விறுவிறுப்புக்கு துணையாக நின்று படத்தை கொண்டாட வைத்திருக்கிறது.

அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஹீரோவின் அதிரடியான மறுபக்கம், என்ற ரீதியில் பல கதைகள் வந்திருந்தாலும், அவற்றை சொல்லும் விதம் அந்த படங்களை மிகப்பெரிய வெற்றிப் படங்களாக்கியிருக்கிறது. அந்த வகையில், தான் எடுத்துக் கொண்ட கதையை முழுமையான ஆக்ஷன் படமாகவும், அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்ததில் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில், மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.