போலீஸ் உயரதிகாரியான நாயகன் நவீன், நேர்மையான ஒரு அதிகாரியாகவும் திறம்பட பணிபுரியும் ஒரு அதிகாரியாகவும் வருகிறார். கொடுக்கப்படும் வழக்குகளை தனது திறமையால் திறம்பட கையாண்டு வழக்குகளை முடித்து வைக்கிறார்.

லெவன் என்ற தலைப்புக்கும் கதைக்கும் இருக்கும் தொடர்பு போல், அந்த தலைப்பிலும் ஒரு மர்ம முடிச்சு உள்ளது. அது என்ன? என்பதும், அதைச் சார்ந்த கதை திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதோடு, கொலையாளி யார் ? என்பதில் இருக்கும் திருப்பங்கள், படத்தின் கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸை நீள வைத்து பார்வையாளர்களை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.
பள்ளியின் தலைமை ஆசிரியையாக நடித்திருக்கும் அபிராமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜை என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அவர்களது கதாபாத்திரம் திரைக்கதையோடு பயணிக்கும் வகையில் அமைந்திருப்பதால், சிறிய வேடம் என்றாலும் பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார்கள்.
முதல் முறையாக கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்திற்கு இசையமைத்திருக்கும் டி.இமான், தனது பாணி எந்த இடத்திலும் தெரியக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். படத்தின் பாடல்களை கூட தனது வழக்கமான பாணியில் கொடுக்காமல், புதிய வடிவில் கொடுத்திருப்பவர் பின்னணி இசையை அளவாக கையாண்டு படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார். பார்வையாளர்களுக்கு எப்படியோ, இசையமைப்பாளர் டி.இமானுக்கு இது நிச்சயம் புதிய அனுபவமாக இருந்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் கேமரா இரவு நேர காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறது. கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானராக இருந்தாலும் வன்முறை காட்சிகள் அதிகம் இல்லாத திரைக்கதை என்பதால் ஒளிப்பதிவாளர் சைக்கோ கொலையாளியை விட, அவரை தேடும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக பார்வையாளர்களிடத்தில் கடத்தியிருக்கிறார். 
எழுதி இயக்கியிருக்கும் லோகேஷ் அஜில்ஸ், கொலை செய்யப்படும் நபர்கள் யார்? மற்றும் எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள் ? என்ற கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழுப்பி முதல் பாதி படத்தோடு பயணிக்க வைப்பவர், இரண்டாம் பாதியில் கொலையாளி யார் ? என்ற எதிர்பார்ப்போடு படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார். ஒரு இடத்தில் கொலையாளி யார்? என்ற சஸ்பென்ஸை உடைப்பவர், அடுத்த சில நிமிடங்களில் அதிலும் ஒரு திருப்பத்தை வைத்து பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார்.
இறுதிக்காட்சி வரை திருப்பங்களுக்குள் திருப்பம், என்று பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை பயணித்தாலும், கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்பில் இருக்கும் நிதானத்தின் மூலம் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், வித்தியாசமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார்.